search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுப்பாட்டில்கள் கடத்தல்"

    புதுவையில் இருந்து சென்னைக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டு அன்பரசன், போலீஸ்காரர் கார்த்திகேயன்மற்றும் போலீசார் ஆலாத்தூர் கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிவேகமாக ஒரு மோட்டார் சைக்கிளும், அதை பின்தொடர்ந்து மினி லாரியும் வேகமாக வந்து கொண்டிருந்தது. அவற்றை போலீசார் வழிமறித்தனர். ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து மினிலாரியை போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரத்து 40 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மினிலாரியில் வந்தவர்கள் சங்கராபுரம் அருகே உள்ள மூரார் பாளையத்தை சேர்ந்த கமருதீன் (வயது 26) மற்றும் புதுவை நைனார் மண்டபத்தை சேர்ந்த வேலு (49) என்பதும் அவர்கள் புதுவையில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்கள் கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கமருதீன், வேலு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஓட்டி வந்த மினி லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய அருசு என்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். #Tamilnews
    ×